உனக்கு உயிரில்லை
ஆனால் மனித உயிர்கள்
உன் மீது உயிராய்.
பூமி கூட சூரியனைச்
சுற்றாமல் சுழலலாம்
மனித உயிர்கள் உன்னைச்
சுற்றாமல் வாழாது.
உயிரினங்கள்
தங்கள் இனத்தோடு சேர்வது போல்
நீயும்
உன் இனம் நாடியே சேர்கிறாய்
நீயும் அணு போல்தான்.
உன்னை எப்படியும் பயன்படுத்தலாம்
ஆயுதமாகவே உன்னை
அதிகம் பயன்படுத்துகிறோம்
“அவன்” இன்றி அணுவும் அசையாது
எங்கள் முன்னோர் வாக்கு
“அவன்” என்பது யாதென உணரவே
அவர்கள் ஆயுள் முழுதும் அலைந்து சென்றார்கள்
அவன் என்பவன் நீதான் என
நாங்கள் கண்டு கொண்டோம்
உன்னைச் சரணடைந்தோம்
உனக்கு அடிமையானோம்
அடிமையான பின்……..
சுற்றம் மறந்து
நல்ல சுகம் மறந்து
பெற்று வளர்த்த தாய் மறந்து
பெற்றெடுத்த சேய் மறந்து
வெட்கத்தை விட்டொழித்து
தன்மானத்தை தாரை வார்த்து
உன்னை அடையவே ஒயாமல் ஓடுகிறோம்.
புகழ்போதை, சுகவாழ்வு
உன் நிழலில் உள்ளதால்
மனித இனமே உன்முன்
மண்டியிட்டு கிடக்கிறது.
கீரைகட்டும் பாட்டிமுதல்
கப்பல் கட்டும் பொறியாளர் வரை
பலரும்
ஊழல் செய்து உயிர்வளர்க்கிறார்கள்
பெண்களின் கற்பு
ஆசைக்கு அடிமையாவது கொஞ்சம்…
காசுக்கு அடிமையாவது கணக்கில் அடங்காது
ஜனநாயகத்தூண்கள் நான்கும்
உனக்கு தலைவணங்குவதால்
அதன் மணிமுடிகள் உன் காலடியில்
பஞ்சமா பதகங்கள் எல்லாம்
உன்னால் இன்று
நடைமுறை வழக்கமாகிவிட்டது.
கடவுள் விசயத்தில்
ஆத்திகமும், நாத்திகமும்
எப்போதும் எதிர்த்திசையில்
உன் விசயத்தில் எல்லோரும்
ஒரே திசையில்
இக்கலியுகத்தில் இன்னும் சில
இளிச்சவாயர்கள்
இருக்கவே செய்கிறார்கள்
உன் ஆளுமை உறங்கி
நேர்மை விழிக்குமென்று
நேர்மை உறங்கிவிட்டதா?
அல்லது உயிரை விட்டதா?
தெரியவில்லை
அந்த ஏமாந்தவர்களைப் பார்த்து
நீ சிரிப்பது புரிகிறது
இந்த மானிட உலகம் இருக்கும் வரை
நீ அதற்கு எஜமானன் என்று
அனால்……
உன்னை மட்டுமே
போற்றிப் பிழைக்கிறார்கள்
இந்த இழி பிழைப்பு
எதற்கு என்று தெரியவில்லை
ஒரு வேளை
எங்கள் முன்னோர்கள் தேடிய
‘அவனுக்கு’ இவை எல்லாமே
தெரியுமோ….. தெரியாதோ…..